பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு - 5 (ஓரொலி வெண்டுறை.)

#பாட்டியற்றுக_தொகுப்பு - 5
அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:5 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய புலவர் #செந்தமிழ்ச்சேய் அவர்கள் உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் painthamizhchokai blogspot.com பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--5
(ஓரொலி வெண்டுறை.)
1. கவிஞர் குருநாதன் ரமணி
கண்டதும் காதல் காணுதல் கனிவுறும் மனத்தாலா?
கண்படும் மேனிக் கட்டிள நிலையெனும் மனப்பாலா?
பண்படும் பெற்றோர் பகிர்ந்துடன் பட்டு நிறைவேறில்
திண்மைக் காதலாய்த் திருமண  மாமே! 

2. கவிஞர் இரா.கண்ணன்
பருவமதில் பிறக்கும் பார்வை நதியில் சுரக்கும்
உருவமின்றிச் சுழலும் உள்ளம் மகிழ்வில் திளைக்கும் 
விரும்பிய உணவை விலக்கும் விழையும் மயக்கம்
அரும்பிய காதலி னழகா மிதுவே..!

3. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
தேன்சிந்தித் தேயமெலாம் தென்மதுரைக் கோபுரமாய் ஒளிர்பவளே!
நான்கண்ட நற்றமிழ்போல் நளினம் பலகாட்டி மிளிர்பவளே!
வான்தந்த கொடைபோல வனப்பினில் ஓங்கித் தளிர்த்தாயுன்
மீன்கண்கள் மதுவுண்டு மீட்டுதடி யாழதனை! 

4. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
கண்டதும் காதலில் கவிழ்தல் கவிஞனின் மரபிலையே
பண்படும் மனத்தையும் பாங்குடன் அறிதலே காதலாமே
கண்படும் போதெலாம் காதலியைக் கவிதையால் எழுதுவதே
பண்படும் காதலெனப் பாசமுடன் உணர்வேனே.

5. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
பட்டுப் பாவாடை பளபளக்கப் பூச்சூடி வந்து
சிட்டுப் பூமேனி சிலுசிலுக்கச் சீரோடு நின்று
மொட்டே நீவந்து முல்லை மலரென்று மணம்வீச
விட்டுவிட்டுத் துடிக்குதென் மெல்லிய நெஞ்சமே! 

6. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
பெற்றோர் பெருமையொடு பெற்றிடப், பெருகிவரும் பேரன்பு
கற்றோர் கல்வியொடு கலந்திடக், கண்டுவரும் கனிவன்பு ; 
உற்றோர் உணர்வோ(டு) உதித்திட, உடன்வரும் உயிரன்பு ;
மற்றோர் மனத்தொடு மலர்ந்திட, மணந்துவரும் மனதன்பு ; 
அற்றோரும் அறத்தொ(டு,) அடைவோரே அவ்வன்பு! 

7. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
காதலின் கண்மணியே கள்ளியே நானுனைத் தேடினேன் 
சாதலை நீக்கிடும் சாகா வரமென நாடினேன் 
மோதலும் வேண்டாமே மோகமே முள்ளாய் நம்முளும் 
நாதமாய்க் கேட்க நலம்பல ஓங்கவே !

8. கவிஞர் சோமு சக்தி
வேல்விழியே வதைக்காதே வேதனையைக் கூட்டாதே வேலாய்
வேல்கசக்கும் உண்டாக்கால் வெப்புநோயைத் தானகற்றும் கேளாய்
வேல்வீசா வெஞ்சமரில் விழுங்காதற் புண்பட்டால் ஏலாய்
சேல்விழியே சிந்துமுத்தம் சேர்க்குமா மருந்தே

9. கவிஞர் கனகரத்தினம் செல்லமுத்து
பித்தத்தைத் தணித்திடுமோ பெருந்துயரம் தந்தேதான் துடித்திடுமோ
அத்தையவள் பெற்றெடுத்த அல்லிராணி உன்நினைப்பால் தினந்தோறும் 
சத்தமின்றிக் காய்ந்திடும் சருகானேன் காதலியே ஏற்றுக்கொள்!
முத்தமின்றிப் போனால் மொத்தவுயிர் போகுமே!

10. கவினப்பன் தமிழன்
மருண்மாலைப் பொழுதன்றோ மனைநிறைய விளக்கேற்றி
இருகையால் ஏந்துகையில் எனைநினைந்தே யேங்குமந்த
மருண்மாலைப் பொழுதே யன்றோ.

11. கவிஞர் சியாமளா ராஜசேகர்
விழிகள் நான்கும் மீட்டும் காதல் ராகம்
மொழியும் மறந்து மோனம் பேசும் மோகம் 
பொழியும் அமுதாய்ப் பொங்கும் மதுர கீதம்
எழிலாய்ப் பரவும் இதய. மெங்குமே !

12. கவிஞர் தர்மா
கண்ணோடு கண்ணிங்கே காதலெனும் மொழிபேசக் கண்டே, 
பெண்ணிங்கு வந்தேறப் பேரிதயம் நானிங்கே கொண்டேன்..! 
பண்பாடு மீறாமல் பாரினிலே நம்காதல் நின்றால் 
மண்ணோடு போனாலும் மறையாமல் வாழுமே..!

13. கவிஞர் விவேக் பாரதி
என்னை அவளைக் கண்டு சென்ற விண்மீன் 
மின்னல் விட்டு நிலவைச் சென்று கூடித் 
தன்னி னாசை சொல்லிக் கூடல் கொண்டு 
கன்னம் தன்னில் முத்த மிட்டதே !

14. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
கண்ணின் மணியே காதல் கிளியே கனிரசமே 
பெண்ணிற் பூத்த பேரழ கேயென் பொன்மயிலே 
எண்ணி லடங்கா ஏக்க முன்னி லென்னுயிரே
எண்ணித் தினம்நா னேங்குகி றேனுனையே !

15. கவிஞர் பாலு கோவிந்தராஜன்
விழியிலே பேசவா விடிய விடிய பேசவா.
விழியால் சாமரம் வீசவே விரைந்தேஓடிவா
எழிலாய் நடந்துவா இனிக்க இனிக்கக் கொஞ்சவா.
மொழிகள் தடையல்ல மொத்தமாய் தரவா.

16. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
பெற்றோரின் மீதுள்ள பேரன்பும் காத லன்றோ
சற்றுமே குறையாத சான்றோரின் காதலு ளாழ்க
பற்றுடனே யிப்புவியில் பாசமுடன் நிலைத்து நிற்கக்
கற்றல் நன்றாம் காதலு மோங்க!

17. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
நிலைக்கும் நினைவில் நிழலாடும் கனவின் கனியே 
கலையாத கற்பகமாய்க் கற்கண்டா யினிக்கும் கரும்பே
விலைகொடுக்க முடியா வித்தகி என்னுள்ள நேசமே 
மலையும் மடுவாக்கும் மாசற்றக் காதலே !
★★★
தொடரும்...

No comments: