பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

12 May 2016

சிந்துபாடுக- 5 இலாவணி


அன்பு நண்பர்களே! கவிஞர்களே! 
புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.:
"‪#‎சிந்துபாடுக‬" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். 
சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.

சிந்து பாடுக - 5
******************
(இலாவணி )
செம்பவள வாய்திறந்து அம்புலியாள் பாடுகிற
செந்தமிழப் பாடலதைக் கேட்டுக்★ கேட் டு★★★
உம்பரரும் சொக்கிடுவார் உம்மத்தம் கொண்டிடுவார் 
ஓயாமல் தாளமதைப் போட்டுப்★போட் டு★★★!
பாவலர் மா.வரதராசன்
கருத்தூன்றுக :
மேற்கண்ட பாடல் வகை "இலாவணி"ஆகும்.
அண்ணாமலை ரெட்டியாரின்,
"செஞ்சடைவி ரித்துத்தவம் ... என்ற பாடல் இவ்வகையே.
கிராமியக் கூத்துகளில் இப்பாடல் அதிகளவு இடம்பெறும்.
***
சிந்துப் பாடல்களைப் பாடிப் பார்த்துச் சந்தம் விளங்கிப் பின் எழுத வேண்டும்.
மேற்கண்ட பாடலில், எட்டுச் சீர்களும்,
ஒவ்வொரு சீரிலும் நான்கு எழுத்துகளும் (ஒற்று நீக்கி) உள்ளன.(செ ப வ ள. வா தி ற து, அ பு லி யா, பா டு கி ற, செ த மி ழ, பா ட ல தை) 
7,8 ஆம்சீர்கள் ஈரெழுத்தே இருந்தாலும் (கேட்டு★) (டு★★★) அந்த எழுத்துக்குப் பதில் அந்த இடத்தில் நீண்டு இசைக்கும் (நீட்டிப் பாட வேண்டும்) . நீண்டிசைக்கும் எழுத்து ★குறியிட்டுள்ளதைக் காண்க. (பாடலை எழுதும் போது குறியிடத் தேவையில்லை. புரிவதற்காகப் போட்டுள்ளேன்.)
பொது இலக்கணம் :
மேற்கண்ட பாடலின்படி...
* ஓரடிக்கு நான்கெழுத்துச் சீர்கள் எட்டு வரவேண்டும்
* செம்பவள...என்பது முதல் கேட்டு என்பது வரை ஓரடி. 
உம்பரரும். என்பது முதல், போட்டு என்பது வரை மற்றோரடி.
* இரண்டடிக்கும் எதுகை அமைய வேண்டும். 
* அனைத்து அரையடிகளின் முதற் சீரும் மோனையால் இணைந்து (செ செ) (உ ஓ)
* ஏழாம் சீரும், எட்டாம் சீரும் ஒரே மாதிரியான ஈரெழுத்துச் சொல்லைக் கொண்டிருக்கும் (கேட்டு, கேட்டு, போட்டு, போட்டு)
இந்த இலக்கணப்படி வருவது "இலாவணி " ஆகும்.
★அடிகளில் பொழிப்பு எதுகை அமைவது இலாவணிக்கு மிகச் சுவையைக் கொடுக்கும். சான்று பாடலில் வந்துள்ளமையைக் காண்க. (ஆனால் கட்டாயமில்லை.)
★ 1,3,5ஆம் சீர்களில் மூன்றெழுத்துச் சீர்களும் வரலாம். குறைந்த எழுத்துக்குப் பதில் அந்த இடம் நீண்டிசைக்கும். இந்தச் சலுகை 1,3,5ஆம் சீர்களுக்கு மட்டுமே. சான்று பாடலில், (உம்மத்தம், ஓயாமல்)
★பாடிப் பார்த்து விளங்கிக் கொள்ள நம் "பைந்தமிழ்ச் சோலை" கட்செவிக் குழுவில் இந்தச் சந்தத்தில் பாடிய என் பாடலைக் கேட்கவும். அதைப் பழகிக் கொள்ளவும். இதே சந்தத்தில் பாடினால் தான் இலாவணி வகை விளங்கும். எழுதவரும்.
இவ்வகையான பாடல் ஒன்றை விரும்பிய பொருளமைய வரும் வெள்ளிக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் (Coment) மட்டும் பதியவும்.
ஒருவர் ஒரு பாடலை மட்டுமே பதியவும். மற்ற பாடல்களைச் செம்மைப்படுத்த நேரமொதுக்க உதவியாகஇருக்கும்.

பயிற்சிப் பாடலை எழுதும் முறை.:
செம்பவள வாய்திறந்து அம்புலியாள் பாடுகிற
செந்தமிழப் பாடலதைக் கேட்டுக் கேட்டு
உம்பரரும் சொக்கிடுவார் உம்மத்தம் கொண்டிடுவார் 
ஓயாமல் தாளமதைப் போட்டுப் போட்டு!



No comments: