பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

12 May 2016

‪சிந்துபாடுக‬- 4 - ஒயிற்கும்மி


அன்பு நண்பர்களே! கவிஞர்களே! 
புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.:
"#சிந்துபாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். 
சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.

சிந்து பாடுக - 4
******************
(ஒயிற்கும்மி)
ஆயிரம் பாவலர் அன்றுமு தல்தன்னால்
ஆனவ ரைபாடி ஓய்ந்துவிட் டார்★★
அதனாலொரு பயனேவர விலையேயவ (ர்) விலைபோயினர்
அந்தமிழ்க் கேயவர் கொள்ளிவைத் தார்★★
பாவலர் மா.வரதராசன்
கருத்தூன்றுக :
மேற்கண்ட பாடல் வகை "ஒயிற் கும்மி"ஆகும்.

"தென்பரங் குன்றினில்... என்ற பாடல் இவ்வகையே.
***
சிந்துப் பாடல்களைப் பாடிப் பார்த்துச் சந்தம் விளங்கிப் பின் எழுத வேண்டும்.
மேற்கண்ட பாடலில்,
ஒவ்வொரு சீரிலும் மூன்று எழுத்துகள் (ஒற்று நீக்கி) உள்ளன.
(ஆ யி ர) (அ று மு ) (த த னா) ( ஆ ன வ) (ரை பா டி ) (ஓ து வி) 
8 ஆம்சீர்கள் ஓரெழுத்தே இருந்தாலும் (டார்★★) (தார்★★)இரண்டு எழுத்துக்குப் பதில் அந்த இடத்தில் நீண்டு இசைக்கும் (நீட்டிப் பாட வேண்டும்) . நீண்டிசைக்கும் எழுத்து ★குறியிட்டுள்ளதைக் காண்க. (பாடலை எழுதும் போது குறியிடத் தேவையில்லை. புரிவதற்காகப் போட்டுள்ளேன்.)
இருகுறில் இணைந்த சீரால் அடி தொடங்குதல் முன்னோர் பாடல்களில் உண்டு. ஆயினும் அது சிறப்பில்லாதது. நாம் நெடில், நெடிலொற்று, குறிலொற்று இப்படியான சீர்களைக் கொண்டே முயலலாம்.
பொது இலக்கணம் :
மேற்கண்ட பாடலின்படி...
* ஓரடிக்கு மூன்றெழுத்துச் சீர்கள் எட்டு வரவேண்டும்
* ஆயிர. என்பது முதல் டார் என்பது வரை ஓரடி. 
அதனா. என்பது முதல், தார் என்பது வரை மற்றோரடி.
* இரண்டடிக்கும் எதுகை அமைய வேண்டிய கட்டாயமில்லை. (முடுகியலின் தொடக்கத்தைப் பொறுத்தே அமையும். அதுவாக அமைந்தால் நன்று) 
* அனைத்து அரையடிகளின் முதற் சீரும் மோனையால் இணைந்து (ஆ ஆ அ அ)
* அடிகளின் எட்டாம் சீர் ஓரெழுத்தே கொண்டு(டார்) (தார்)
இந்த இலக்கணப்படி வருவது "ஒயிற் கும்மி" ஆகும்.
★ இரண்டாவது அரையடி முடுகியல் அடியாக அமைந்துள்ளதைக் காணவும். ஒயிற்கும்மிக்குத் தனிச்சிறப்பே இந்த முடுகியல் தான்.
முடுகியல் பற்றிய விதிகளை "முயன்று பார்க்கலாம் - 1 "இல் காணவும்.
மேற்கண்ட பாடலில்,
தனதானன என்றசந்தம் நான்கு சீர்களில் அமைந்துள்ளது.
★பாடிப் பார்த்து விளங்கிக் கொள்ள நம் "பைந்தமிழ்ச் சோலை" கட்செவிக் குழுவில் இதைச் சந்தத்தில் பாடிய என் பாடலைக் கேட்கவும். அதைப் பழகிக் கொள்ளவும். இதே சந்தத்தில் பாடினல் தான் முடுகியலடியைத் தடுமாறாமல் பாட முடியும்.
முயன்று பார்க்கலாம் இணைப்பைக் காணக் கீழுள்ள இழையைச் சொடுக்கவும்
https://m.facebook.com/groups/914195052001517?view=permalink&id=961764630577892
இவ்வகையான பாடல் ஒன்றை விரும்பிய பொருளமைய வரும் வெள்ளிக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் (Coment) மட்டும் பதியவும்.
ஒருவர் ஒரு பாடலை மட்டுமே பதியவும். மற்ற பாடல்களைச் செம்மைப்படுத்த நேரமொதுக்க உதவியாகஇருக்கும்.

பயிற்சிப் பாடலை எழுதும் முறை.:
ஆயிரம் பாவலர் அன்றுமு தல்தன்னால்
ஆனவ ரைபாடி ஓய்ந்துவிட் டார்
அதனாலொரு பயனேவர விலையேயவர் விலைபோயினர்
அந்தமிழ்க் கேயவர் கொள்ளிவைத் தார்!


No comments: