பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

1 Apr 2016

சிந்து பாடுக - 2


அன்பு நண்பர்களே! கவிஞர்களே! புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.:
"#சிந்துபாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். 
சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.

சிந்து பாடுக - 2
*******************
(நொண்டிச் சிந்து)
சாதிக ளாயிர மேன்★★ - சாதிச்
சங்கங்க ளும்பல பொங்குவ தேன்★★
சாதித்த தேதுமுண் டா★★ - எனச்
சற்றேயு ணர்வினைப் பெற்றிடு வாய்★★
பாவலர் மா.வரதராசன்

கருத்தூன்றுக :
மேற்கண்ட பாடல் வகை "நொண்டிச் சிந்து"ஆகும். 
மகாகவி பாரதியாரின் புகழ்பெற்ற 
"நல்லதோர் வீணைசெய் தே.,.
"நெஞ்சுபொ றுக்குதிலை யே...
"ஓமெனப் பெரியோர் கள்...
போன்றவை இவ்வகைப் பாடல்களே.
***
சிந்துப் பாடல்களைப் பாடிப் பார்த்துச் சந்தம் விளங்கிப் பின் எழுத வேண்டும்.
மேற்கண்ட பாடலில்,
ஒவ்வொரு சீரிலும் மூன்று எழுத்துகள் (ஒற்று நீக்கி) உள்ளன.
(சா தி க) (ளா யி ர) (ச க க) (ளு ப ல) (பொ கு வ) 
3,8 ஆம்சீர்கள் ஓரெழுத்தே இருந்தாலும் (மேன் ★★) (தேன்★★)இரண்டு எழுத்துக்குப் பதில் அந்த இடத்தில் நீண்டு இசைக்கும் (நீட்டிப் பாட வேண்டும்) . நீண்டிசைக்கும் எழுத்து ★குறியிட்டுள்ளதைக் காண்க. (பாடலை எழுதும் போது குறியிடத் தேவையில்லை. புரிவதற்காகப் போட்டுள்ளேன்.)
நான்காவது சீர் சிறுகோடிட்டுத் தனிச் சொல்லாக வரும். பெரும்பாலும் அது ஓரசையாகவே வரும். (என) அல்லது (சாதி) போல தேமாச் சீர்களாக வரும்.
இருகுறில் இணைந்த சீரால் அடி தொடங்குதல் முன்னோர் பாடல்களில் உண்டு. ஆயினும் நாம் நெடில், நெடிலொற்று, குறிலொற்று இப்படியான சீர்களைக் கொண்டே முயலலாம்.
பொது இலக்கணம் :
மேற்கண்ட பாடலின்படி...
* ஓரடிக்கு மூன்றெழுத்துச் சீர்கள் எட்டு வரவேண்டும்
* சாதிக. என்பது முதல் தேன். என்பது வரை ஓரடி. 
சாதித்த . என்பது முதல், வாய். என்பது வரை மற்றோரடி.
* இரண்டடிகளும் எதுகையால் இணைந்து (சாதி, சாதி)
* முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து (சா, ச) (சா, ச)
* அடிகளின் மூன்றாம் சீரும், எட்டாம் சீரும் ஓரெழுத்தே கொண்டு(மேன், தேன்) (டா, வாய்)
* பொழிப்பு எதுகை.: சான்று பாடலில் 5,7 ஆம் சீர்களில் பொழிப்பு எதுகையைக் காண்க (சங்க, பொங்கு) (சற்றே, பெற்றி)
இது பாடலின் இனிமையை மேலும் கூட்டும். ஆனால் கட்டாயமில்லை. அமைந்தால் சிறப்பு.
இந்த இலக்கணப்படி வருவது "நொண்டிச் சிந்து" ஆகும்.
★பாடிப் பார்த்து விளங்கிக் கொள்ள நம் "பைந்தமிழ்ச் சோலை" கட்செவிக் குழுவில் பலவகைச் சந்தத்தில் பாடிய என் பாடல்களைக் கேட்கவும். உங்களுக்கு எந்தச் சந்தம் பிடிக்கிறதோ அதைப் பழகிக் கொள்ளவும்.
இவ்வகையான பாடல் ஒன்றை விரும்பிய பொருளமைய வரும் வெள்ளிக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் (Coment) மட்டும் பதியவும்.
ஒருவர் ஒரு பாடலை மட்டுமே பதியவும். மற்ற பாடல்களைச் செம்மைப்படுத்த நேரமொதுக்க உதவியாகஇருக்கும்.

பயிற்சிப் பாடலை எழுதும் முறை.:
சாதிக ளாயிர மேன் - சாதிச்
சங்கங்க ளும்பல பொங்குவ தேன்?
சாதித்த தேதுமுண் டா - எனச்
சற்றேயு ணர்வினைப் பெற்றிடு வாய்!

No comments: