பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

10 Feb 2016

நெஞ்சொடு கிளத்தல்



நான்பெற்ற இன்பத்தை நானறிந்த வாறாக
ஏன்தந்தேன் எல்லோர்க்கும் என்னெஞ்சே - வான்பெய்
மழையெந்தக் கைம்மாறு மக்களிடம் கேட்கும்
விழைவாலே சொன்னேன் விரைந்து.!

பணத்திற்கா அன்றிப் பதவிக்கா உண்ணும்
உணவுக்கா இப்பணிசெய் கின்றேன் - கணந்தோறும்
இல்லாள் எரிச்சலும் என்கால வீணடிப்பும்
தொல்லை பலகண்டேன் தொய்ந்து!

கற்றுப் பயனென்ன கற்பித்தல் ஒன்றேயாம்
இற்றைநாள் இந்நிலையேன் இங்கில்லை - உற்றறிந்தே
முற்றுமிலை யென்றாலும் முத்தமிழின் யாப்புகளைச்
சொற்பமெனச் சொன்னேன் துணிந்து.!

போற்றற்கும் ஏத்திப் புகழ்தற்கும் நானென்றும்
ஆற்றவிலை என்றுரைப்பாய் அன்புளமே - தூற்றலுக் (கு)
எம்மலையும் வீழாதே என்கடனை என்றைக்கும்
செம்மையுடன் செய்வேன் தெளிந்து!
★★★

No comments: