பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

17 Jan 2016

கவியரங்கத் தலைமைக் கவிதை



(தலைப்பு)
போற்றப்பட வேண்டியது...
கவியரங்கத் தலைமைக் கவிதை
"""""""""""""""""""""""""""""""""
*தமிழ் வாழ்த்து.*
(நேரிசை வெண்பா)
முந்தைப் பழமொழியாம் மூப்பிலா முத்தமிழாம்
சிந்தை குளிர்விக்கும் தேமொழியாம் - முந்துவையே
உன்றன் அடிவணங்கி ஓரரங்கம் யாமியற்ற
இன்றமிழே காப்பாய் இரு!


*அவையடக்கம்*
(எண்சீர் விருத்தம்)
பூத்தொடுத்தால் அழகான மாலை யாகும்
          புனைந்துரைத்தால் அதுநல்ல கவிதை யாகும்
பாத்தொடுத்தால் கம்பனது காவி யம்போல்
          பார்போற்றப் புகழ்கின்ற பனுவ லாகும்.
நாத்தொடுத்துச் சொல்வீசி என்க ருத்தை
          நலந்தொடுத்துப் பேசவந்தேன் என்க ருத்தில்
வாய்த்துடுக்காய் எதுவரினும் பொறுப்பீர் என்று
          வண்டமிழ அவையோரை வணங்கு கின்றேன்.!

*தலைமைக் கவிதை.*
(அறுசீர் விருத்தம்)
போற்றுதற் குரிய தென்று
       புகழுடைத் தலைப்போ நான்கு
ஆற்றலை அள்ளித் தந்த
       அழகுடை இயற்கை ஒன்று...
ஏற்றத்தை அளித்துக் காக்கும்
       இறைவன்மற் றொன்று...வாழ்வில்
ஊற்றென அன்பைக் கொட்டும்
       ஒப்பிலாத் தாய்மை ஒன்று...

உயர்வினை அளித்துக் காக்கும்
       ஒப்பிலா ஒழுக்கம்...என்று
நயத்தொடு கவிய ரங்கம்
       நடந்திடும் நன்னா ளின்று.
வியப்புடன் இணையம் பேசும்
       விரிவுடன் இதயம் பேசும்
இயம்பிட இருப தின்பேர்
       இங்குளார் தமிழ்ப்பாட் டோடே!

(எண்சீர் விருத்தம்)
போற்றிடவே வேண்டுமெனில் முதலில் சுற்றும்
      புலப்படாத அண்டத்தைப் போற்றல் வேண்டும்
ஏற்றவிதம் கோள்களினைச் சுற்ற வைத்தே
      இப்புவியின் வாழ்க்கைக்கே உதவும்...எந்த
மாற்றத்தை நிகழ்த்திடவும் அதனால் கூடும்
      மாறாமல் இன்றுவரை இயங்கும் அந்த
மாற்றமிலா இயற்கையினைப் போற்றல் நன்று
      மாந்தயின முழுமைக்கும் கடமை ஈதே!

இயற்கையினைக் கடவுளெனச் சொல்லு கின்ற
      இனியவழி ஆன்மீகம்.,கடவுள் தம்மை
உயிர்ப்பிக்க உருகிடுவார் அவரால் இந்த
      உயிர்க்குலங்கள் வாழுதென்பார். மனத்தால் கூடி
முயங்கிடுவார் உலகத்தில் நடப்ப தெல்லாம்
      முற்றிலுமே அவன்செயலே என்று ரைப்பார்
தயங்காமல் இறைவனையே போற்று கின்றார்
      தவறேதும் இதிலில்லை மனமே தெய்வம்!

தமிழ்மொழியைப் பாடாத கவிஞன் கூடத்
      தாய்மையினைப் பாடாமல் விட்ட தில்லை
அமிழாமல் நமைக்காப்பாள் அரவ ணைப்பாள்
      ஆளாக்கி விடுவதற்குள் அழிந்தும் போவாள்
உமியாக உதறிடினும் கவலை கொள்ளாள்
      உயிர்கொடுத்தே உதிரத்தைப் பாலாய்த் தந்தே
நமைக்காக்கும் தாய்மைக்கோ இணையே இல்லை.
      நம்வாழ்வே அவள்கொடுத்த பிச்சை யன்றோ?

ஒழுக்கத்தைக் கடைபிடித்தால் உயர்வோம் வாழ்வில் 
      உலகத்தின் இலக்கியங்கள் இதையே கூறும்
இழுக்கத்தில் வீழாமல் காப்ப தற்கே
      எப்போதும் ஒழுக்கநெறி செல்லல் வேண்டும்.
வழுவாத ஒழுக்கத்தால் வாழ்வில் சேரும்
      வளத்திற்கும் புகழிற்கும் எல்லை யில்லை
ஒழுக்கத்தை நம்வழ்வில் போற்றல் வேண்டும்
      உறுதியாகப் பற்றுங்கள் உயர்வைக் காண்பீர்!

இப்படியாய்த் தான்கொண்ட தலைப்பை யொட்டி
      இருபதின்பேர் அவர்கருத்தைச் சொல்ல வந்தார்.
எப்படித்தான் சொல்கிறார்கள் என்று பார்க்க
      என்னறிவைக் கூர்தீட்டிக் காத்துள் ளேன்நான்
அப்படியே நீங்களிதைப் படித்துப் பார்த்தே
      ஆனவரை வாழ்த்துங்கள் அதற்குப் பின்பு
தப்பாமல் "போற்றிடுதல் எது"தான் என்று
      தலைவர்தம் நிறைவுரையில் காண்பீர் நீரே!!!

No comments: