பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Oct 2015

பாட்டியற்றுக - 9


நண்பர்களே.! கவிஞர்களே.! 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 9" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
*** *** *** ***
ஆசிரிய விருத்தம் (வேறு)
விளைநிலத்தை அயலானுக் 
களித்துவிட்டால் அதன்பின்னர்
விளைச்ச லின்றி
இளைத்துவிழும் நிலைதோன்றும்
அயலானைக் கையேந்தும்
இழிவே மிஞ்சும்.
உளைந்திடுமென் உள்ளத்தோ.(டு.)
இவ்விழிவை உரைத்திட்டேன்
உங்கள் முன்னே
விளைந்திடுமோர் நலன்வேண்டி...
பிழையென்றால் உரைப்பீரே
மேன்மை யோரே.!
--பாவலர் மா.வரதராசன்

*** *** *** ***
கருத்தூன்றுக.:
ஆசிரியப் பாவின் இனமாகிய விருத்தம் இக்காலத்திற்கு மட்டுமன்றி நம் இலக்கிய வரலாற்றின் பெரும்பகுதியைத் தன்னகத்தே கொண்டவோர் பாவினமாகும்.
இன்று பல மரபு கவிஞர்களாலும் இயற்றப்பெறும் பாவினமான "ஆசிரிய விருத்தம்."
அறுசீர்கள் தொடங்கிப் பல சீர்கள் வரையிலான அமைப்பில் முற்காலத்தில் பாடப்பெற்றன.
தற்கால வழக்கில் மிகச் சிலவே நடைமுறையில் உள்ளன.
நம் சோலையின் இப்பகுதியின் வாயிலாக நாம் பல்வேறு விருத்த வகைகளைக் கையாண்டு மரபைக் காப்போம்.
மேற்கண்ட பாடல் "அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." 
(காய்/காய்/காய்/காய்/மா/தேமா)ஆகும்.
பொது இலக்கணம்.
* ஆறு சீர்கள் பெற்று,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து,
* நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த இரண்டு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று, (ஆறு சீர்களை ஓரடியாகத் தொடர்ச்சியாகவும் எழுதலாம்.)
* அடிதோறும் எதுகையைப் பெற்றும்,
* ஓரடிக்கு " காய், காய்,காய்,காய்,மா,தேமா என்ற சீர் வரையறையைக் கொண்டும், நான்கடிகளைப் பெற்றும்,
* ஈற்றுச்சீர் ஏ, ஆ, ஆல், ஓ, வாழி என்பனவற்றுள் ஒன்றைக் கொண்டும் 
முடிவது(ஏகாரம் சிறப்பு.)
"அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." எனப்படும்.
காய்ச்சீரெனில் எக்காயும் வரலாம்.
மாச்சீர் எனில் தேமா, புளிமா எதுவும் வரலாம். 
ஆனால் ஈற்றுச்சீர் தேமா மட்டுமே வரவேண்டும்.
முதலடியின்முதற்சீர் எந்தக் காய்ச்சீரில் தொடங்குகிறதோ மற்ற மூவடிகளின் முதற்சீரும் அதே காய்ச்சீரில் தொடங்க வேண்டும். சான்று பாடலில் நான்கு முதற்சீர்களும் கருவிளங்காயில் தொடங்கியிருப்பதைக் காண்க. இரண்டு, மூன்று, நான்காம் சீர்களில் எந்தக் காய்ச்சீர்களும் வரலாம்.
இவ்வகையான ஒரு விருத்தத்தை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டுமே எழுதி அனுப்புங்கள்.
★★★

1 comment:

Unknown said...

மரபினைக் காக்கவந்த மாமணியே மன்னா
வரம்பொடு பாபுனைய வார்த்தக் கருத்தில்
தரமான நற்கவிதைத் தந்து பயிற்சி
தரும்நல் தருமதுரை வாழி