பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

30 Oct 2015

பாட்டியற்றுக 10 இன் தொகுப்பு




அன்பு நண்பர்களே கவிஞர்களே வணக்கம் !

பாட்டியற்றுக தொகுப்பு 10
அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பல கவிஞர்கள் நன்கு தேர்ச்சியடைந்து விட்டனர் என்பது இப்பயிற்சியில் மிகக் குறைவான திருத்தங்களே இருந்தன. என்பதனால் அறிந்து பெருமகிழ்ச்சியடைந்தோம் இது பைந்தமிழ்ச் சோலையின் அனைத்துப் பங்கேற்பாளரும் பெருமை கொள்ள. வேண்டிய சாதனை.
தொகுப்பைப் படிக்கும் அன்பர்கள் பங்கேற்ற கவிஞர்களை வாழ்த்தினால் ஊக்கமாக இருக்கும்.
நன்றி!!! 



பாட்டியற்றுக தொகுப்பு 10
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1, கவிஞர் நிரோஸ்  அரவிந்த் 

அனல்தனில் பிறந்தாள் அழகுடல் கண்டே
   அதமனாங் கீசகன் குதித்தான்
கனலெனும் பெண்ணாள் கீசகன் தனக்குக்
   கண்ணியம் சொல்லியே தடுத்தாள்
மனமெனுங் குரங்கு மதியது தன்னை
   மறந்துநல் துரோபதை மங்கை
சினமது கொள்ளச் சிறுமைதான் செய்தே
   சிறப்புறு வீமனால் அழிந்தான்

2.
கவிஞர் வள்ளிமுத்து
ஏரினை யெழுதி நீள்வயல் கிழித்து
   எருவொடு தழையிட வேண்டும்
நீரினைச் செலுத்தி நிலஞ்சமன் படுத்தி
   நெல்வயல் பண்பட வேண்டும்
காரினைக் கண்டே கதிரவன் வணங்கிக்
   கரும்பசை நாற்றிட வேண்டும்
ஊரினைக் காக்க உலகினை யாக்க
   உள்வயல் விளையவும் வேண்டும்

3.
கவிஞர் பசுபதி
நந்தமிழ் மொழியை நம்முயிர்த் தாயை
   நலங்கெட செய்பவ ரிடத்தே
செந்ததமி ழுணர்வைச் செவ்வனே ஊட்டிச்
   செயல்படச் செய்திடு வோமே
முந்தைய புலவர் பற்பலர் தோன்றி
   முத்தமிழ் வளர்த்திடச் செய்தார்
இன்றைய தமிழர் நாமதைப் போற்றி
   ஈடிலா புகழ்மிகுப் போமே!

4.
கவிஞர் சேலம்பாலன்
நினைத்ததை எங்கும் நேர்படப் பேசும்
   நேர்மையைஉளத்தினில் வைத்தே 
வினைகளை ஆற்றும் நல்லவ ரிங்கே
   மிகமிகக் குறைநதுதான் போனார் !
தனைஉயர்த் திடவே அரசிய லாளர் 
   தனித்துவ மாகவே நாட்டில்
பனைஎன வாழப் பாமரர் ஏழை 
   படுகிறார் துன்பமே தானே !
5. கவிஞர் சுந்தரராசன்
காலையி லெழுந்து கண்விழித் ததுமே 
   கைசெலுஞ் சோலையை நோக்கி!
மாலையி லிரவில் நாள்முடி கையிலே 
   மதிசெலுஞ் சோலையை நோக்கி!
வேலையின் நடுவே நொடிகிடைத் தாலும்
   விரல்செலுஞ் சோலையை நோக்கி!
சோலையி லென்னை இழுத்திடுங் காந்தம்
   சுந்தரத் தமிழ்மகள் தானே!

6.
கவிஞர் பரமநாதன் கணேசு
ஒளியுற எழுந்தே! உன்னத நிலையில்
   ஒப்புற நின்றிடும் அழகும்
தெளிவுற அறிவும் வேண்டிய பொருளும்
   தேடியே தந்திடும் நாடும்
குளிரினில் வாடிக் கொள்துயர் கோடி
   கொள்ளினும் சிறப்புற உழைக்கும்
எளியவர் வாழ்வைத் தினம்தினம் கண்டே
   என்மனம் களித்திடு மாமே!

7.
கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
பொய்கையார் பூதம் பேயொடு மழிசைப்
   புனிதநம் குருகையின் மாறன்
செய்யவன் பாதம் பணிமது ரகவி
   சேரனாம் வஞ்சியர் கோமான்
துய்யநம் பட்டன் அவர்மகள் கோதை
   தொண்டர டிப்பொடி பாணன்
ஐயனெங் கலியன் அவனொடே மாற்பால்
   ஆழ்ந்தவர் பன்னிரு வராமே! 

8.
கவிஞர் விவேக் பாரதி
சித்திரை மாதம் இளவெயில் நேரம்
   சிவந்திடும் வான்விளிம் போரம்
முத்துநி கர்த்தாள் மொய்குழல் கொண்டாள்
   முழுமதி முகமதைக் காட்ட
நித்திரை தோன்றும் இரவென எண்ணி
   நீலவான் கருமையுற் றிங்கே
மொத்தவூர் தூங்க விழித்ததோ எங்கள்
   மொட்டனை நால்விழி தானே !

9.
கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
உழைப்பிலே உறுதி உடையவர் தமக்கே
   உன்னத உலகினில் பெருமை .
தழைத்திடும் தர்மம் தரணியில் நாளும்
   தன்னல மற்றதோர் வாழ்க்கை .
பிழைப்பெலா மென்றும் பிசகியும் போகா
   பின்னரும் வந்திடும் நமக்கே .
அழைத்திடும் வரையில் நின்வழி நோக்கி
   அன்புடன் பற்றுதல் காண்பாய் !

10.
கவிஞர் அர.விவேகானந்தன்
மதுவெனும் போதை மனத்தினை மாய்க்கும்
   மதிகெட அதன்வழி நடந்தால்
ததும்பிய வாழ்வும் தள்ளிடு முன்னை;
   தரணியில் வெறுமையாய்த் தவித்தே
முதுமையில் உழன்று முக்தியை விடுப்பாய்
   முனைந்துமே மதுவொழித் திட்டால்
புதுமையாய் வாழ்வும் புலர்ந்திடும் மனதில்
   புன்னகை நிறைந்துவ ழியுமே!

11.
கவிஞர் சுதர்சனா
கண்டனன் உன்னை அந்நொடி எனக்குக்
   கருத்தினை வழங்கிய கலையே!
விண்டிட மொழியில் வார்த்தைகள் இல்லா
   விரிகுழல் மேவிய எழிலே!
மண்டினேன் உன்றாள் மதிதனைப் பெற்றேன்
   மயக்கமே தந்தனை மானே!
அண்டியே உன்னை வாழவே வந்தேன்
   அழகியே என்னுயிர்த் தமிழே!
12. கவிஞர் இரா.கி.இராஜேந்திரன்
குழையொடு கூத்தன் குழல்விரி நடனம்
   குமுறுதல் போல்மழை மேகம்
மழைபொழி நாளில் பெய்யவில் லையே
   மனமகிழ் இறைவனே முகிலும்
பிழையிலா வண்ணம் வான்மிகப் பரந்து
   பெய்யவே செய்தருள் பெம்மான்
தழைத்திடச் செய்வாய் தரணியைத் தாளைத்
   தலைப்பட வணங்கிடு வோமே!

13.
கவிஞர் குருநாதன் ரமணி
எத்தனை யழகாய் எத்தனை பொருளில்
   இன்னறும் கவிதைகள் செய்தே
இத்தனை கவிஞர் மரபினில் பாடல்
   இலக்கணம் முயன்றிடும் போது
வித்தகர் ஒருவர் வழியினைக் காட்டி
   விழுமமு ரைத்திடும் போது
பித்தனாய் நானும் பாவெனத் தந்தே
   பேசுதல் எவணெனும் மலைப்பே!

14.
கவிஞர் விஜயகுமார் வேல்முருகன்
மண்ணினில் பிறந்த மாந்தரில் தாயின்
   மாண்பினை மறந்தவர் இல்லை
பண்ணினை எழுதும் புலவரும் தாயின்
   பண்பினைப் பாடிட மறவார்!
எண்ணமும் சிறந்து விளங்கிடத் தாயை
   என்றுமே நினைத்திட வேண்டும்!
திண்ணமாய் அன்பைத் தாயிடம் வைத்தே
   திறமைகள் வளர்த்திடல் நலமே!

15.
கவிஞர் அஷ்ஃபா அஸ்ரப் அலி
தன்னிக ரற்றத் தமிழ்மொழி தன்னில்
   தாகமென் றுரைப்பவ ரிங்கே
அன்னியர் மொழியை அவரவர்க் குள்ளே
   அழகுடன் மொழிவதைக் காண
இன்புற லின்றி இகழ்வதிம் மொழியை
   இகழ்வது அன்னையைப் போன்றே
என்பதை யுணரா திருப்பவ ரவரை
   என்றுமே எண்ணிடச் சினமே!

16.
கவிஞர் வனராசன் பெரியண்டர்
நாடியே தொழிலும் நலமுறச் செய்யின்
   நலமெலாஞ் சேர்ந்திடுந் தோளை!
மூடியே யிருக்குங் கதவுகள் திறக்கும்
   முயன்றிடு! வழிவருங் காலை!
தேடியும் வாராத் திரவியம் யாவும்
   தேடியுன் கரம்வரும் வேளை
வாடியுன் மனமும் வருந்திட வேண்டா
   வாழ்வது சிறந்திடும் நாளை!

17.
கவிஞர் நாகினி கருப்பசாமி
வஞ்சமும் கொண்டு வறியநல் உறவை
   வாட்டியே வதைத்திடும் எண்ணம்
'நெஞ்சதில் விட்டு நீக்குதல் இல்லா
   நெருஞ்சியாய் நிலைத்தலில் வளரும்
பஞ்சமா பாவம் தரணியில் என்றே
    படித்துமே உணர்ந்திடா மாந்தர்
துஞ்சிடல் வேண்டும் எழுந்திட இயலாத்
   துயரெனும் தொட்டிலில் இன்றே!

18.
கவிஞர் அழகர் சண்முகம்
மலையினில் தோன்றி மலர்களைச் சூடி
   மகிழ்வுடன் தேனிசை பாடி
அலையுடன் ஓடி அருவியில் ஆடி
   அணைகளின் கற்களில் மோதிக்
கலைசெழித் தோங்கக் கவலைகள் நீங்கக்
   கருணையைக் காத்தகா லம்போய்
விலையெனக் கூறி விற்பவர் கையில்
   விதியினால் சிக்கிவிட் டேனே!

19.
கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
பைந்தமிழ்ச் சோலைப் பாவலர் மாலை
   பார்ப்பவர் யாரையும் ஈர்க்கும்
ஐந்திலக் கணத்தின் அகத்தினை யெளிதில்
   அறிந்திட நல்வழி காட்டும்
நைந்துவி டாது செய்யுளின் திறத்தை
   நானில முணர்ந்திடச் செய்யும்
பைந்தமிழ்ச் சோறு பகிர்ந்துணு மாறு
   பண்பொடு படைத்துயர் வோமே!

20.
கவிஞர் சிதம்பரம் சு.மோகன்
புலவரின் பாவில் பிழையெழக் காணின்
   பொறுத்திடா துளந்தனைக் கொள்வேன்!
நலமிலைப் பாட லென்றவ ரொப்ப
   நலமெது வென்றுரை சொல்வேன்!
கலகமே வரினு மெனதுளங் கூறும்
   கருத்தினைக் கடைவிரித் திடுவேன்
புலவனாம் கீரன் அழிந்திடக் கண்ட
   புலவனே வரினுமீங் கிஃதே!

21.
கவிஞர் சியாமளா ராஜசேகர்
முப்புர மெரித்த சங்கரன் மகனே
   முன்னவ நின்னடிப் பணிந்தேன் !
தப்பெது செயினும் தடுத்திட வருவாய்
   தயவுடன் திருந்திடச் செய்வாய் !
அப்பமும் வடையும் அவலொடு கடலை
   அன்புடன் படைத்திட மகிழ்வாய் !
ஒப்புமை யில்லா உச்சிதத் தேவே
   ஒற்றுமை ஓங்கிட வருளே !

22.
கவியன்பன் கலாம்
தந்தையின் அணுவும் கருவறை நோக்கித்
   தனிமையில் முதன்முதற் பயணம்
முந்தவும் பின்னே இறையருள் கொண்டு
   முயற்சியால் வென்றதும் பயணம்
பந்துபோ லுருண்டு பதிவுடன் திங்கள்
   பத்தினில் கருவறைப் பயணம்
வந்திடும் தருணம் வந்ததும் நலமாய்
   வையகம் கண்டதும இதுவே!

No comments: