சிறியனென் றென்னைச் சிரித்திக ழாதீர்
அறிவினுக் கில்லை அகவை - உறைநோய்
நிறையழிக்கும் புல்லின் நிறையறிவீர் மண்ணில்
மறைந்துளதே வித்துள் மரம்.!
மேடேறிப் பார்க்குங்கால் மேதினியி லெல்லாமே
ஈடாகத் தோன்றும் எழிலார்ந்தே - தேடியுணர்
ஆன்ற அறிவில் அனைத்தும் இணையன்றோ
சான்றோரில் மூத்தோரென் றில்.!
அளக்கும் துலாக்கோல் அறிவொன்றே கண்டீர்
பிளக்கும் மலையை உளிதான் - வளைத்துப்
படர்ந்த கருவேலத் தாற்பயனு மில்லை
அடர்துளசி யேநல் மருந்து.!
வம்பாய்ப் படிப்பொன்றே வாய்த்த தகுதியென்பீர்
கம்பன் பயின்றதெக் கல்லூரி - அம்மே
கடுகு சிறுத்தாலும் காரம்போ காதே
விடுக இழிவெண்ணம் வீண்.!
முயன்று பலரும் முனைவராய் ஆனார்
இயன்றும் மரபறியார் யாப்பில் - வியர்க்காதே
குப்பைத் திருமேனி கூன்நிமிர்த்தி வாழ்வளிக்கும்
தப்பாமல் யாப்பைப் பயில்.!
*பாவலர் மா.வரதராசன்*
No comments:
Post a Comment